யாதும் ஊரே யாவரும் கேளிர்!

யாதும் ஊரே யாவரும் கேளிர்!

மதுரைக்கும் தஞ்சாவூருக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்த காலம் அது.  உங்கள் கற்பனையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்… எதோ சேர, சோழ, பாண்டியர் கதைன்னு நினைச்சிக்காதீங்க. என்னோட கல்லூரி விடுதியில் எனக்கும், என் அறை நண்பனுக்கும் கடுமையான சண்டை நடந்து கொண்டிருந்த காலம் அது. அவன் தஞ்சாவூர் பக்கம், நான் மதுரைப் பக்கம். எங்க இரண்டு பேருக்கும் யார் ஊரு பெருசுன்னு (!) அடிக்கடி சண்டை நடக்கும். அவன் எங்க ஊரைப் பத்தி கேவலமா பேசுவான் பதிலுக்கு நான் அவன் ஊரைப்பத்தி ரெம்ப கேவலமா பேசுவேன்.

பெரும்பாலும் அறைக்குள் மட்டும் நடக்கும் சண்டை என்னமோ தெரியல அன்றைக்குப் பார்த்து டி.வி பார்க்கும் அறையில் ஆரம்பித்து விட்டது. அட இது நல்லாயிருக்கேன்னு எல்லாரும் டி.வி-ய விட்டுட்டு எங்க சண்டைய பார்க்க ஆரம்பிச்சுடாங்க… அங்கங்க நியாத்துக்கு குரல் கொடுக்குறதுக்குண்ணே ஒரு நாலு பேரு இருப்பாங்களயா அதுல ஒருத்தன் என் பக்கமா பேச ஆரம்பிச்சான், அவன் திண்டுக்கல். நீ.. திண்டுக்கல்காரன் … நீ பேசாதேன்னு சொன்னவுடனே வந்தது பாரு கோபம்… ஏன்டா எக்மோர் வேற சென்னை வேறயா… அவனும் மதுரைக்காரன் தான்டா… ஒரு ஏறு ஏறினேன்.

அப்புறம் நேரம் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமா தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடின்னு பெரிய கூட்டமா கூடிப் போச்சு…ரெம்ப பாசக்கார பசங்கய்யா. அவனும் ஒத்தையாள எவ்ளோ நேரம் தான் தாக்குப்பிடிப்பான். ஒரு கட்டத்துல போங்கடா போங்கா நீங்களும் உங்க மதுரையும்…. வோர்ல்ட் மேப்ப எடுத்து மதுரைய சுத்தி ஒரு அடிக்கு காம்பஸ் வச்சு வட்டம் போட்டுங்கங்கடா… எல்லாரும் மதுரைக்காரன்டா…ன்னு சொல்லிட்டு போய்ட்டான்.

மனசுக்கு ரெம்ப கஷ்டமாயிருச்சு … நம்ம மதுரைக்காரன்னு தெரியாம அவன இந்த ஓட்டு ஓட்டிடேம்னு தான். அதானே … கனியன் பூங்குன்றனார் சும்மாசொல்லியிருக்க மாட்டார்ல ?